சென்னை:
வனவிலங்குகள், மலைவாழ் மக்களின் நீராதாரத்தை அழிக்கும், விவசாயிகளின் நிலங்களை தரிசாக்கும் கைக்கான் வளைவுதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்வருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மலைகளில் ஒன்று கல்வராயன் மலை. கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதி இது. மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை தவிர வேறு நீர்வளம்இல்லா பகுதி. மலைகளில் சிறு-சிறு ஓடைகளாக வரும் நீரை மழையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் சேமித்து கச்சிராப்பாளையம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளின் வழியாக சென்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நல்லூர் என்ற கிராமத்தில் மணிமுத்தாறுடன் கலக்கிறது.
நீதிமன்றத்திற்கு தவறான தகவல்
மலைவாழ் மக்களின் ஒரே நீராதாரமாக விளங்கும் சிற்றோடைகளை கைக்கான் வளவு என்ற கிராமத்தில் தடுப்பணை கட்டி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்லதிட்டமிட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதனால், மலைவாழ் மக்களின்குடிநீர் ஆதாரம், பாசன ஆதாரம் பாதிக்கப்படுவதுடன் வனவிலங்குகள் நீரின்றி அழியும். வன வளங்கள் அழியும். கோமுகி அணையின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளின் நிலங்கள் தரிசாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இதை உபரி நீர் திட்டம் என்று முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உயர்நீதிமன்றத்திலும் இத்தகைய தவறான தகவலை அரசு கொடுத்துள்ளது. மலையில் உள்ள ஆற்றை திருப்புவது இயற்கைக்கு எதிரானதும், சட்டத்திற்கு விரோதமானதும் ஆகும்.
அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்
ஏற்கனவே, கல்வராயன் மலையில் வாழும் மக்கள் நீரின்றி விவசாயம் செய்யமுடியாமல், உயிர் வாழ பிழைப்பு தேடிசென்று பலர் உயிரை இழந்திருக்கின்றனர். வருடத்தில் பாதி நாட்கள் வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் புலம் பெயர்ந்து தான் பிழைத்து வருகின்றனர். இந்த நிலையில், கொஞ்ச, நஞ்ச நீரையும் சேலம் மாவட்டத்தில் உள்ள பணக்கார விவசாயிகளின் நிலங்களுக்கு நீரை திருப்பிக்கொண்டு செல்வது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மலைவாழ் மக்கள் மலையிலிருந்து காலி செய்துவிட்டு பிழைப்பு தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உருவாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நான்கு சர்க்கரை ஆலைகளுக்கும் கரும்பு பயிரிட்டு அனுப்ப முடியாமல் ஆலைகளை மூடவேண்டி வரும். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பர். நிலங்கள் தரிசாகி வீட்டுமனைகளாக மாறும். வேளாண் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிசமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் பாதிக்கும், பலவிதமான நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்வது தான் ஒரே தீர்வு என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.எனவே, இந்த கைக்கான் வளைவு திட்டம்கைவிடப்பட வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கையாகும். இதை தாங்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.