சென்னை, மே. 5- சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போன்று காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகள் மிகவும் பிர பலமானது.
மக்கள் இங்கு அதிக அளவில் கூடுவர். அதேபோல் காசிமேடு கடற்கரை யையும் அழகுபடுத்த வேண்டும் என வட சென்னை மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் களம் இறங்கியுள்ளது. ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் காசிமேடு கடற்கரை அழகுற வடிவமைக்கப்பட உள்ளது.
சென்னை காசிமேடு முதல் பார்வதி நகர் வரை உள்ள 5 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த கடற்கரை அழகுபடுத்தப்பட உள்ளது. 5 கோடியே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் காசிமேடு கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக 1 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை, நீரூற்றுடன் கொண்ட பிளாசா, உணவு அரங்கம், விளையாட்டு பகுதி, கழிப்பறைகள், மீன் சிற்பங்கள், செல்பி பாயின்ட் உள்ளிட்டவை அமைய உள்ளது. மேலும் காசிமேடு மீனவர்களின் வாழ்க்கை வரலாறு, கலாச்சாரம், உணவு முறைகள் போன்ற சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் பிளாசா ஸ்டால்கள் இடம் பெற உள்ளது.