tamilnadu

கனக சபை தரிசனத்தைத் தடுப்பது ஆலயப் பிரவேச சட்டத்துக்கு எதிரானது!

சென்னை, அக். 14 - “சிதம்பரம் கோயிலில் கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலயப் பிரவேச சட்டத்துக்கு எதிரானது” என தமிழ்நாடு அறநிலையத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலின் கனக சபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு கடந்தாண்டு மே 17 அன்று அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் டி.ஆர். ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  இந்த மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘சோழ மன்னர்க ளால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்பினால் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராசர் கோவில் ஒரு பொ துக்கோவில். அது தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல!’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இங்கு கனக சபையில் இருந்து தரிசனம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து, கனக சபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலயப் பிரவேச சட்டத்துக்கு எதிரானது. கனக சபையில் மாற்றம் செய்ய தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை. அத்து டன் தங்கள் உரிமைகள் பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அறநிலையத்துறை கூறியிருந்தது.  இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய, மனுதாரருக்கு கால அவகாசம் அளித்து விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.