tamilnadu

img

ஜூலிக்குப் புரியவில்லை

கதைசொல்லி  சி.சரிதா ஜோ  அந்தத் தோட்டத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள், செடி, கொடிகள், ஒரு பெரிய கிணறு, எந்நேரமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால். அந்த இடம் முழுவதும் பச்சைப்பாயை விரித்தது போல் பச்சை பசேல் என வயல்வெளிகள். சுற்றிலும் இருக்கும் மரங்களில் இருந்து பறவைகளின் ஒலிகள். பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள், கூண்டில் கோழிகள் இப்படி அந்த இடம் அவ்வளவு ரம்யமாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை. நேர நேரத்துக்குச் சாப்பாடு கிடைத்தது. ஆனாலும் முன்பிருந்த வீட்டிலிருந்த சௌகரியம் சுதந்திரம் எனக்கு இல்லை. ஏனென்றால் இங்கு என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் முன்பிருந்த வீட்டில் ஒரு நாளும் என்னைக் கட்டிப் போட்டதில்லை. எனக்குப் பிடித்த நேரத்தில் ஊரையே சுத்திட்டு வந்து சமத்தா வீட்டின் முன்பு படுத்துக் கொள்வேன். நான் சிறியதாக இருக்கும் போது என்னை எடுத்து வந்தது என்னவோ ஸ்ரீராமும் அவன் அம்மாவும் ஆக இருந்தாலும் அந்த தெருவில் உள்ள எல்லார் வீட்டிலும்  உள்ளவர்களுக்கும் நான் என்றால் ரொம்பச் செல்லம்.  என்னை எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்ரீராமும் மதியும் அண்ணன் தங்கை. அவர்களின் வீட்டில் தான் நான் முன்பு வளர்ந்து கொண்டிருந்தேன். ஸ்ரீராமும் மதியும் என்னைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டும் என்னோடு விளையாடிக் கொண்டுமே இருப்பார்கள். கடந்த வாரத்தில் ஒரு மாலை நேரம் மழைச்சாரல் போட்டு நின்றபின் நான் வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தின் கீழே படுத்து இருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களைப் பொறுக்கிக் கொண்டே” அண்ணா நம்ம ஜூலியை பாரேன் வெள்ளை வெளேரென்று எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றாள் மதி. “நம்ம ஜூலி அழகு மட்டுமல்ல. ரொம்பச் சமத்து. தேவையில்லாம ஒரு நாளும் கத்தினது இல்லை. ரொம்ப சாது” என்றான் ஸ்ரீராம்.

“அதனாலதான் நம்ம ஜூலியை நம்ம தெருவில் இருக்கிற எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இல்லையா அண்ணா” என்றாள் மதி. “ஆமாம் மதி” என்றான் ஸ்ரீராம். “ஆனால் அண்ணா எதிர் வீட்டு பாட்டி உங்க நாய் ஒரு  அசமந்து மாதிரி குலைக்கிறதே இல்லை. எதிர்த்தெருவில் இருக்கிற இதே வயசு ஆகுற நாய்க்குட்டி யாரு புதுசா வந்தாலும் குலைக்குது என்று சொன்னாரே.  அண்ணா அசமந்துனா  என்ன அண்ணா. எனக்கு ஒண்ணுமே புரியல.  மக்குனு சொல்லியிருப்பார்களோ  அண்ணா” என்று கேட்டாள் மதி. அய்யோ எனக்கும் தெரியலையே. அந்த வார்த்தையே எனக்குப் புதுசா இருக்கு. நீ இங்க நாவல் பழங்களைப் பொறுக்கிட்டு இரு. நான் போயி அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்” என்று கூறிவிட்டு வேகமாக சமையல் அறையை நோக்கி ஓடினான் ஸ்ரீராம். போன வேகத்தில் திரும்பி வந்து “ஆமாம் நீ சொன்னது சரி மதி. அசமந்துன்னா மக்குன்னு அர்த்தம் அப்படின்னு அம்மா சொன்னாங்க” என்றான் ஸ்ரீராம் “அப்போ நம்ம ஜூலி மக்கா அண்ணா” “அப்படி எல்லாம் சொல்ல முடியாது. அப்பா சொல்லி இருக்காங்க நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் வாசத்தை வச்சு கண்டுபிடிச்சிடுமா. சில நேரங்களில்  முகத்தைப் பார்த்தவுடனே கூட அவங்க யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு கண்டுபிடிச்சிடுமாம். நம்ம வீட்டுக்கு யாருமே கெட்டவங்க வந்ததில்ல. அதனாலதான் நம்ம ஜூலி கொலைச்சது இல்ல. அந்த பாட்டிக்கு ஒன்னும் தெரியாது விடு மதி” என்று தங்கையை சமாதானப்படுத்தினான் ஸ்ரீராம். “அப்ப நம்ம ஜூலி மக்கு இல்லை மக்கு இல்லை” என்று குதித்தாள் மதி. இல்லவே இல்லை. அப்படி இருந்தா இந்த தெருவில் இருக்கிற எல்லோருக்கும் எப்படி நம்ம ஜூலியைப் பிடிக்கும். நாலாவது வீட்டில இருக்கிற ரமேஷ் மாமாவிற்கு எந்த விலங்கைப் பார்த்தாலும் பிடிக்காது. குறிப்பா நாய்னா பிடிக்கவே பிடிக்காதாம்” “ஏன் அண்ணா?” ஏன்னா அவரை அவர்  சின்ன வயசா இருக்கும்போது ஒரு நாய் கடிச்சிருச்சாம். இப்ப எல்லாம் சுலபமா ஊசி போட்டுக்குறோம். ஆனா அப்ப எல்லாம் குன்னூர்னு ஒரு ஊரு இருக்காம் அங்க ரொம்ப குளுகுளுன்னு இருக்குமாம் அங்க கூட்டிட்டு போய் தான் ஊசி போடுவாங்களாம். அதுவும் தொப்புள சுத்தி ஊசி போடுவாங்களாம். அப்படித்தான் அவருக்கு போட்டாங்களாம். அதிலிருந்து நாயைப் பார்த்தாலே தூரமா போயிருவாராம். அவர் கூட நம்ம ஜூலிக்கு பிஸ்கட் போடுவதை நான் பார்த்திருக்கிறேனே. நம்ம ஜூலின்னா ஜூலி தான்” அப்படின்னு சொல்லி மதியம் ஸ்ரீராமும் என்ன வாரி அணைச்சுக்கிட்டங்க. இதையெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு அழுகையா வருது. இனி யாரு என்னைக் கட்டிப்பிடிப்பாங்க. இனி யாரு எனக்கு முத்தம் கொடுப்பாங்க. என்னை யார் கொஞ்சுவாங்க. என்று எண்ணிய படியே சோகமாக  அங்கிருந்த மரம், செடி கொடிகளை வேடிக்கை பார்த்தபடி படுத்துக் கிடந்தது ஜூலி. சுதந்திரமா சமத்தா இருந்த என்னை ஏன் இங்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க. அதுவும் கட்டி போட்டுட்டாங்க. எல்லாமே புதுசா இருக்கே என்று எண்ணியவாறு சற்று கண்ணயர்ந்து விட்டது. தோட்டத்தின் காம்பவுண்ட் கதவு திறக்கும் சத்தம் கிரீச்சிட்டது. சத்தம் கேட்டவுடன் விழித்துக் கொண்டது. பசியோடு சாப்பாட்டை எதிர்பார்த்து வாலையாட்ட ஆரம்பித்தது ஜூலி. கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டது. அப்பொழுதுதான் பார்த்தது அருகில் புதிதாக ஒரு நாய் கட்டப்பட்டிருந்ததை. அந்த நாயிடம் மெதுவாக பேச ஆரம்பித்தது. அந்த நாய் இரண்டு வருடங்களாக அந்தத் தோட்டத்தில் இருப்பதாகவும் அதுவும் ஒரு பெண் நாய் என்றும் கூறியது. அதனுடைய பெயர் அம்மு என்றும் இங்கு வந்த நாளிலிருந்து பெரும்பாலும் கட்டித்தான் போட்டு இருக்கிறார்கள் என்றும் கூறியது. நான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கு தெரியலையே. கட்டி வச்சிருக்காங்க. கோழிகளை கூண்டுல வச்சிருக்காங்க. ஒண்ணுமே புரியல. ஒரு வேளை எல்லாத்தையும்... நான் என்ன தப்பு பண்ணேன் தெரியல. இவங்க எல்லாம் என்ன தப்பு பண்ணினார்கள் என்று தெரியவில்லை. ஒண்ணுமே புரியல. ஸ்ரீராம் வீட்டில் இருந்த வரைக்கும் அந்த தெருவில் இருக்கிற எல்லோருமே போகும்போது என்கிட்ட பேசாம போகவே மாட்டாங்க. தலைய தடவுவாங்க, பிஸ்கட் போடுவாங்க என அவங்களோட செல்ல பிள்ளையாவே பார்த்துக்கிட்டாங்க. அதுவும் ஸ்ரீராம மதியம் என்ன எந்நேரமும் கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க. எனக்கு சில நாளு கறி சாப்பிடலாம் என்று இருக்கும். அந்த தெருவில் கடைசியில் இருக்கிற கடையில எனக்கு கறி சோறு வைப்பாங்க. அது கூட மறந்துட்டு. இவங்க கொஞ்சிக்கிட்டு இருக்கும்போது நான் அங்க கூட போக மாட்டேன்.

அந்த கொஞ்சல் எனக்கு அவ்வளவு பிடிக்கும். என்னை யாருமே அடித்தது இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஆனா எல்லாரும் வீட்ல இருந்தும் சிக்கன், மட்டன், முட்டை, பிரியாணி போயிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் ஒரு கிண்ணத்தில் முழுவதும் எலும்பு துண்டுகளும் முட்டையும் சாதமும் வைத்து எடுத்து வந்தார். அதைப் பார்த்தவுடன் ஜூலிக்கு நாக்கில் எச்சில் ஊறியது. வந்தவர் ஜூலியை தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. போட்ட வேகத்தில் திரும்பிச் சென்று விட்டார். ஏன் அவர் என்கிட்ட பேசாமயே போயிட்டாரு என்று ஜூலி வருத்தத்தோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு பசியிலும் அந்த ருசியான சாப்பாடு ருசியாக இல்லை.  அடிக்கடி ஒரு தாத்தா வருவார். அவர் வரும்போது எல்லாம் பொம்பள நாயே வீட்ல வெச்சி இருக்காதீங்க. அத நம்ம ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி ஆபரேஷன் பண்ணி விட்டுருங்க. இல்ல, எங்காவது கொண்டு போய் விடுங்க. நாளை பின்ன அது குட்டி போட்டுச்சுன்னா அதை யார் பாத்துக்குறது. இப்படித்தான் நாங்க ஒரு பொம்பள நாய வளத்தி அது காம்பவுண்டுக்குள்ள பூராத்தையும் அசிங்கம் பண்ணி வைத்துவிடும் என்று கூறிக் கொண்டே, இருப்பார். அதனாலதான் கொண்டு வந்து விட்டுட்டாங்களோ என்று யோசித்துக் கொண்டே எனக்கே இப்படி இருக்குதுன்னா ஸ்ரீராமும் மதியும் என்னை  கொஞ்சிக்கிட்டே இருப்பாங்களே, என்ன விட்டு அவங்களால எப்படி இருக்க முடியும்னு தெரியலையே. எனக்கு ஸ்ரீராமையும் மதியையும் பாக்கணும் போல இருக்குது. யாராவது பார்த்தீங்கன்னா நான் இந்தத் தோட்டத்தில் இருக்கேன்னு சொல்லிடறீங்களா?