tamilnadu

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நீதிபதி

சென்னை, மார்ச் 21- அமைப்புசாரா தொழிலாளர் நிதிக்காக தனது ஒரு மாத சம்பளத்தை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கினார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவர் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராக தொழில் செய்த போது தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். தொழிலாளர்கள் மீது பெரும் மதிப்பையும் அவர்களின் நலனில் அக்கறையும் கொண்ட இவர், உயர்நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.  இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சனிக்கிழமை (மார்ச் 21) தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து காசோலையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.  இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வேலை இழப்பவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இந்த கடினமான சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை கொடுத்துள்ளேன். இதேபோல் உதவும் எண்ணம் உள்ளவர்களும் தங்களது பங்களிப்பை தர வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை தொடங்கி வைத்துள்ளேன் என்றார்.