tamilnadu

img

களத்தில் முளைத்துள்ள சில களைகளைக் களைவீர்!

உணர்ச்சிக் கொந்தளிப்பாக காட்சி அளித்தது ஜெய்ஹிந்த்புரம். மதுரை மாநகரின் மையமான  பகுதிகளில் ஒன்று; தொழிலாளர் வர்க்க மக்கள்  குவியலாக குடியிருக்கும் பகுதிகளில் ஒன்று;  அதுமட்டுமல்ல, மதுரை நகரிலேயே ஒவ்வொரு  தெருவுக்கும் காந்தி, நேரு, நேதாஜி, பாரதி என சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் களைத் தாங்கிய பெருமைக்குரியது ஜெய்ஹிந்த்புரம்.  ஜெய்ஹிந்த்புரத்திற்கு மற்றொரு முக்கியத்துவமும் உண்டு.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோட்டையும் கூட அது.  ஒரு காலத்தில் சமூகவிரோதிகள் பலர் இருந்த பகுதியான இங்கு, மக்களின் அன்றாட  வாழ்வியல் பிரச்சனைகளில், அடிப்படை வசதிக்கான பிரச்சனைகளில் தலையிட்டு; எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, இப்பகுதி யின் எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்று  படிப்படியாக வளர்ந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  அதன் காரணமாகத்தான் தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் வார்டுகளில் இருந்து மதுரை மாமன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள்.  

அப்படி, பல்லாண்டு காலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைப் பொறுப்பிலிருந்து மக்கள் பணியாற்றி, படிப்படியாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வராக, மக்களின் அன்பைப் பெற்ற ஊழியராக வளர்ந்து வந்தவர்தான் தி.நாகராஜன். கடந்த  மாநகராட்சித் தேர்தலில், மதுரை மாமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், துணைமேயர் பதவிக்கான வாய்ப்பு மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைக்கப்பெற்றது

. இப்பொறுப்புக்கு, தொழிலாளி வர்க்க மக்கள் நிறைந்த ஜெய்ஹிந்த்  புரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட நாக ராஜனை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. துணைமேயராக பொறுப்பேற்ற நாள் முதல் தனது வார்டிலும் சரி, மதுரை மாநகரின் பல்வேறு வார்டுகளிலும் மாநகராட்சியின் திட்டப்  பணிகளை பார்வையிடுவது, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பது, அவற்றை நிவர்த்தி செய்வதற்காக இரவு-பகலாக பணி யாற்றுவது, கட்சியின் வழிகாட்டுதலோடு மதுரை மக்களின் நலன்காக்க தேவையான அனைத்து பணிகளிலும் ஈடுபடுவது என - ஒரு வார்டு கவுன்சிலர் - ஒரு துணைமேயர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உண்மை யிலேயே ஓர் எடுத்துக்காட்டாக தி.நாகராஜன் செயல்படுகிறார் என்றால் அது மிகையல்ல.

இது மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியரைப் பற்றிய  தற்புகழ்ச்சி அல்ல; மாறாக, மதுரை மக்களின்,  ஜெய்ஹிந்த்புரம் பகுதி மக்களின் உள்ளத்தி லிருந்து வரும் வார்த்தைகள்.  உண்மையிலேயே மக்களை நேசிக்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

அதற்கு காரணம், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களின் - மக்கள் பிரதிநிதிகளின்- அப்பழுக்கற்ற, லஞ்ச-லாவண்யமற்ற, ஊழல் புகார்கள் எதுவுமற்ற, அர்ப்பணிப்புமிக்க பணி மட்டுமே.  மதுரை மாநகரில், நாட்டின் - தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடப்பதைப் போலவே - அரசின் திட்டப் பணிகளில் சிற்சில அரசியல் புள்ளிகள் - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சி வேறுபாடின்றி, கொள்கை வேறுபாடின்றி, காண்ட்ராக்ட்கள் மூலம் அரசுப் பணத்தை - மக்கள் பணத்தை சூறையாடுவதற்காகவே கூட்டுச் சேர்ந்துகொண்டு, இந்தக் கூட்டணியில் - கேடுகெட்ட பாஜக நபர்களையும் சேர்த்துக்  கொண்டு காய்நகர்த்துவது; அராஜகம் செய்வது; தட்டிக்கேட்பவர்களை ரவுடி களைக் கொண்டு மிரட்டுவது; காவல்துறை அதி காரிகளை சரிக்கட்டுவது - என ஆளுங்கட்சி யின் பெயரை சொல்லிக் கொண்டு, உண்மை யிலேயே பல பிரச்சனைகளை சரிசெய்ய முனை யும் தங்களது கட்சியின் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு முற்றிலும் எதிராக செயல்படுகிற நபர்களுக்கு, துணைமேயராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் நாகராஜனின் நேர்மை தடைக்கல் லாக நிற்கிறது.

 அவர்கள் அவரது உயிருக்குக் குறி வைக்கிறார்கள்.  தமிழ்நாட்டின் 2வது பெரும் நகரமான மதுரை  மண்ணில், அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டு  வருகிறது என்று மக்கள் எண்ணிக் கொண்டி ருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாடும் 2024 தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற மாபெரும் அரசியல் முழக்கத் தோடு அணி சேர்ந்து நிற்கும் மிக முக்கியமான  தருணத்தில், மாநகராட்சியின் துணைமேய ரையே ஒரு கும்பல் குறி வைக்கிறது; சமூக விரோதிகளை ஏவி அவரது வீட்டை அடித்து நொறுக்குகிறது; நூலிழையில் - அவரது மனைவி செல்வராணி தனது பலத்தை யெல்லாம் திரட்டி வீட்டுக் கதவை மூடியிருக்கா விட்டால் சமூகவிரோதிகள் வீட்டிற்குள் புகுந்து நாகராஜனின் உயிரை பறித்திருப்பார்கள் என்ற பயங்கரச்சூழல்; அவர் தப்பிவிட்டதால் ஆத்திரம் கொண்ட கும்பல் அவரது அலுவலகத்தை அடித்துநொறுக்குகிறது.  “மதுரை மாநகரக் காவல்துறையும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையும் இதுவரை யிலும் இந்த கொலைவெறித் தாக்குதலை ஏவிவிட்ட நபர்களை கைது செய்யவில்லை.

அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். காவல்துறைக்கும் தெரியும். எச்சரிக்கிறோம். அரிவாள், கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் சமூகவிரோதிகள் துணை மேயரின் வீட்டுக்கதவை வெட்டிக்கொண்டும், நொறுக்கிக்கொண்டும் இருந்தபோது அங்கிருந்து கூக்குரல் எழுப்பி, ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய ஆய்வாளராக உள்ள கதிர்வேலு வுக்கு அப்பகுதி மக்கள், தோழர்கள் தொலை பேசியில் அழைத்தால், அவர் ‘மீட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுங்கள்’ என்கிறார். துணைமேயரின் உயிரைக் காப்பதைவிட உங்களுக்கு அப்படி என்ன மீட்டிங்? ஜெய்ஹிந்த்புரத்தில் ஒருகாலத்தில் நிலவிய ரவுடித்தனத்தை ஒழித்து, மக்கள்  இயக்கத்தை கட்டி வளர்த்து, அமைதி நிலவும் பகுதியாக மாற்றியது மார்க்சிஸ்ட் கட்சி.

ஆனால் இன்றைக்கு ஜெய்ஹிந்த்புரத்திலும் சரி, மதுரை மாநகரிலும் சரி கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராள மாக நடமாடுகிறது. சமூகவிரோதிகள் தாராள மாக நடமாடுகிறார்கள். காவல்துறைக்கு இது தெரியாதா?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, எங்களது ஊழியர்கள், எங்களது தோழர்கள் மரணத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் உழைப்பாளி வர்க்க  மக்களின் நலனுக்காகவே எங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்தவர்கள். நாங்கள் முழங்குகிற கோஷம் வெறும் வார்த்தைகள் அல்ல... அதை அப்படியே செய்தே காட்டிவிடுவோம்... எச்சரிக்கை”. ஜெய்ஹிந்த்புரத்தில் ஆவேசக்கொந்த ளிப்புடன் புதனன்று மாலை ஆயிரக்கணக் கானோர் திரண்டு நடத்திய மாபெரும் கண்டன  இயக்கத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்களின் உரைவீச்சு இது.  

களத்தில் முளைத்துள்ள சில களைகளை உடனே களையவேண்டும் தமிழ்நாடு அரசு.  துணைமேயருக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்விக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  - எஸ்.பி.ராஜேந்திரன்