tamilnadu

img

பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்க.... முதல்வருக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள்

சென்னை:
பத்தாண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று  சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனைஅனுபவித்த சிறைவாசிகள் ஆயிரக்கணக்கானோ ரை தமிழக அரசு விடுதலை செய்தது. அதேபோல தமிழ்நாடு சிறைச்சாலைகளில்  10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.தமிழக சிறைச்சாலைகளில்  பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை காலத்திற்குப் பின்பும் முஸ்லிம்கள் பல ஆண்டுகளாகசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல குற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாமல் அல்லது விசாரணையின்றி பல ஆண்டுகளாக முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்  இதுபோன்று சிறையில் இருக்கக்கூடியமுஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சென்னையில் ஒரு சிறப்பு மாநாடு நடத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கிற பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சிறைவாசிகளுடைய பட்டியல் அரசால் வரையறுக்கப்பட்டு,  அதில் ஒரு பகுதியினர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை
யொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆயினும், எஞ்சி இருக்கக்கூடிய ஒரு பகுதி முஸ்லிம் சிறைவாசிகள் சிறைச்சாலைகளில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். நோய்வாய்பட்டு,சிறுநீரகம் செயலிழந்து கஷ்டப்படக் கூடிய முஸ்லிம் சிறைவாசிகளை, அவருடைய குடும்பத்தின் துயரத்தை கணக்கில் எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் குழு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற நடத்திய கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தமிழ்நாடு அரசு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து இருப்பவர்களையும். விசாரணையின்றி  பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;