திருவள்ளூர், ஏப் 30- ஈகுவார்பாளையத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சியில் 7 ஏரிகள் இருந்தன, இவற்றில் இரண்டு ஏரிகள் காணாமல் போய் விட்டது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் தேடி பார்ப்பதாக கூறுகின்றனர்.இந்த நிலையில் இருக்கின்ற 5 ஏரிகளை பாதுகாக்கும் வண்ணம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்வாய்களை சீரமைக்க வேண்டும், காரம்பேடு சித்தூர் நத்தம் செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும், நச்சு புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.பின்னர் சங்க கொடி மற்றும் பெயர் பலகையும் திறக்கப்பட்டது. ஏரிகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் டி.தியாகராஜன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலாளர் ஏ.ரவி வரவேற்றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், வட்ட செயலாளர் எம்.சிவக்குமார், வட்ட துணைத் தலைவர் பி.கருணாமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.செல்வராணி பகுதி நிர்வாகி வெங்கடாதிரி ஆகியோர் பேசினர் பொருளாளர் ஆர்.பரசுராமன் நன்றி கூறினார்.