tamilnadu

இலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

போரூர்,ஏப். 27- காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான். தற்போது சென்னை மேட்டுக் குப்பத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளேன் என்று தெரிவித்தார்.அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண் கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகர் பகுதியில் இருந்து பேசியது தெரிய வந்தது. மர்ம நபரை கோயம் பேடு காவல்நிலையத்தினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வெள்ளியன்று (ஏப். 27) நெற்குன்றம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த மிரட்டல் ஆசாமி மைக்கேல் பிரீடி என்பவரை கைது செய்தனர்.அவர் அளித்த வாக்கு மூலத்தில் நான் அலுமினியம் பேப்ரிகேஷன் வேலை செய்து வருகிறேன். வியாழனன்று முன்தினம் வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.உடனடியாக எனது மனைவியிடம் 100-க்கு தொடர்பு கொண்டு உன் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். பின்னர் மது அருந்தினேன். டி.வி.யில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்ததாலும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்ததாலும் நான் எனது செல்போன் மூலம் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடி குண்டு வைத்து உள்ளதாக கூறினேன் என்று தெரிவித்தார்.மேலும் என்னுடைய செல்போன் எண் பழைய வீட்டின் முகவரியில் இருப்பதால் போலீசாரால் என்னை பிடிக்க முடியாது என நினைத்தேன் என்றும் தெரிவித்தார்.

;