தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குடி யிருப்போர் நல சங்களின் கூட்டமைப்பு, தன்னார்வ ளர்கள் இணைந்து ஓசூர் புத்தகத் திருவிழா குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகத் திரு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குறவர், போயர், இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள், திருநங்கைகள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் என இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த புத்தகவிழாக் குழுவினர் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், காய்கறிகள், முககவசங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், நகராட்சி ஆணையர் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் காலை, மாலை அம்மா உணவகம் மூலம் உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பணிகளுக்கிடையில் புத்தக திருவிழா குழுவுடன் இணைந்து செயல்படும் நிழல் அறக்கட்டளை இரண்டு பள்ளி மாணவர்களின் படிப்பு செலவையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிஎஸ்சி படிக்கும் ஒரு மாணவனின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளன.
இது தவிர, உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்க 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருள்கள், முக கவசங்கள் உள்ளிட்டவைகளை புத்தகத் திருவிழா குழு சேகரித்தது. அவற்i அம்மா உணவக செலவீனங்களுக்கு நான்கு தவணைகளாக மாநகராட்சி ஆணையரிடம் நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சியிலும், சேவையிலும் சாதனை படைத்துள்ள குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் துரை செயலாளர் நீலகண்டன், பொருளாளர் சீனிவாசலு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சேதுராமன், ஓசூர் தலைவர் சந்துரு, பொருளாளர் அரிச்சந்திரன், துணை தலைவர் பவானி, நிழல் அறக்கட்டளை கண்மணி, புத்தகத் திருவிழா குழு தலைவர் துரை, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சீனிவாசலு, நிர்வாகிகள் வனவேந்தன், சிவந்தி அருணன்சலம் மற்றும் நிர்வாகிகளுக்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர், அம்மா உணவக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். இப்பணியில் ஈடுபட்டோருக்கு புத்தகத் திருவிழா குழு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.