சென்னை, அக். 24- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பகல் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னைக்குள் நுழைய போக்குவரத்து காவல் துறை தடை வித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பேருந்து கள் இயக்கப்பட உள்ளதால், பொது மக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு
வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல் போரூர் சுங்கச்சாவடி, கார்த்திக்கேயன் நகர், எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ், தூசன்பவர் அருகிலும் மற்ற இடங்களிலிருந்து அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம், இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகத்தின் அருகிலும், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகிலும் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனு மதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்கெட் ‘இ’ ரோட்டில் உள்ள நிறுத்தத்திலிருந்து, ‘பி’ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்
தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வரும் 24, 25, 26 மற்றும் 28 ஆகிய நான்கு நாட்களிலும், பகல் 2 மணி முதல் மறுநாள் விடியற்காலை 2 மணி வரையிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அனு மதிக்கப்பட்ட வாகனங்களின் விபரம்: செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரியில் சி.டி.எச். சாலை அடைந்து பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுண்டனா வழியாகவும், திருவள்ளூர் மற்றும் திருப்பெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டை இடது புறம் திரும்பி சென்னை வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்ல வும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. 100 அடி சாலை, பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச்.சாலை வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். பூந்த மல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3ஆவது அவென்யூ, 2ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13ஆவது மெயின்ரோடு, 2ஆவது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால், தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகனங்கள் இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர்.சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.