tamilnadu

img

மனதை கொள்ளை கொள்ளும் வேடந்தாங்கல்!

ஸ்ரீராமுலு
“பறவைகள் பலவிதம் ஒவ்வொன் றும் ஒரு விதம்” ஒவ்வொரு வருடமும் புலம்பெயர்ந்த பருவத்தில் சைபிரியா, ஆஸ்திரேலியா, கனடா என்று உலகின் பல்வேறு திசை களில் இருந்தும் எதிர்காற்று வேகம் குறையும் காலத்தில் பறக்க தொடங்கி, வாரக் கணக்கில் பயணித்து கடல் எல்லைகளை தாண்டி பல்லா யிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்த வரும் பயணம் அவ்வளவு சுலபமல்ல. வானில் எதிர் கொள்ளும் சங்கடங்கள் எண்ணில் அடங் காது. அவைகள் அனைத்தையும் எதிர் கொண்டு இன்பச் சுற்றுலாவுக்கு வரும் இந்த விருந்தாளிகளுக்கு சின்னஞ்சிறு கிராமமான வேடந்தாங்கல் ‘ஒரு மிதக்கும் வசிப்பிடமாகும்’. உலகின் எந்த மூலைகளில் இருந்தும் விசா, பாஸ்போர்ட் என்று எதுவும் இல்லாமல்  கட்டற்ற சுதந்திரமாக வந்து வேடந்தாங்க லில் சுற்றுத் திரியும் விருந்தாளிகள் ஒன் றல்ல இரண்டல்ல, ஆறு ஏழு மாதக் காலத் துக்கு இங்கேயே தங்கி ஓய்வெடுக்கின்றனர்.  பறவைகளை தங்களது சொந்த விருந் தினர்களைப் போல் பாதுகாத்து வரும் வேடந்தாங்கல் கிராம ஏரி சுமார் 73 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1961 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது இங்குள்ள சரணாலயம்.  இதுதான் நமது நாட்டின் முதலாவது பறவைகள் சரணாலயமாகும். ஆங்கிலே யர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் 400 ஆண்டுகளைக் கடந்தும் உள்ளூர் மக்களால் காலங்காலமாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது.  பழவேற்காடு, கோடியக்கரை, வெள்ளோடு, வடுவூர், கூந்தன் குளம் என்று 60க்கும் மேற்பட்ட பறவைகள் சரணா லயங்கள் இருந்தாலும் வேடந்தாங்கல் ஏரிக்கு மட்டும் பறவைகள் அதிகம் வரு வதற்கு காரணமே அங்கு சின்ன சின்ன தீவுகள் போன்று உள்ள நீர் கடம்பு, சமுத்திர பாலை, நீர்க்குருவை, கருவேலம் என இயற்கை யாக வளரும் மரங்கள் தான். இந்த மரங்கள் குட்டையாக இருந்தாலும் படர்ந்த நிலையில் இருப்பதால் எளிதில் கூடுகள் கட்டி முட்டை யிட்டு குஞ்சுகள் பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன.

விதவிதமாய் படையெடுக்கும் பறவைகள்...
தண்ணீர் நிறைந்த 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி ரம்யமாக காட்சியளிக்கி கிறது. தற்போது நிலவி வரும் குளுகுளு தட்பவெப்பத்தால் பறவைகளின் படை யெடுப்பு தொடங்கிவிட்டன.  கொரோனா பெருந் தொற்றுக்கு பிறகு, இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருக்கும் ஏரி, சரணாலயத்தின் சுவர் ஓவியங்கள், வரவேற்பு வளையம் கண்களுக்கு விருந்தளித்தன.  40 அடி உயரமுள்ள கோபுரம், பார்வை யாளர் மாடங்கள், கற்கள் பதித்த நடை பாதை, இயற்கையையும் பறவைகளையும் ரசிப்பதற்கு ஆங்காங்கே இருக்கைகள் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகள். ஏரிக்கரையில் விலங்குகள், பறவைகள் வடிவில் குடிநீர் குழாய்கள், புதிதாக கழிப் பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பறவைகள் வந்தா லும் அவற்றில் சிலவற்றை ஏரிக் கரையில் இருந்தே எளிதாக அடையாளம் காணலாம். தொலைதூரத்தில் அமர்ந்திருக்கும் கிளுவை ஊசிவால் வாத்து, மரக்கிளை களில் அமர்ந்திருக்கும் பறவைகளைக் கூட உயர் கோபுரம் மேல் நின்று டெலஸ்கோப், பைனாகுலர் வழியாக மிக அருகாமையில் பார்த்து ரசிக்கலாம். (பல வகையான பைனாக்குலர் சரணாலயத்திலும் வெளி யிலும் வாடகைக்கு கிடைக்கிறது). பெலிக்கன் என்னும் பறவை ஆஸ்தி ரேலியாவிலிருந்து வருகிறது. நீண்ட இறக்கை, சுமார் 8 கிலோ வரை எடை கொண்ட இந்தப் பறவையின் அலகுப் பகுதியின் கீழ் உள்ள பை போன்ற அமைப்பில் சுமார் ஒரு கிலோ அளவிற்கு மீன்களைச் சேமிக்கும். சேமித்த மீன்களை தனது குஞ்சுகளுக்கு எடுத்து வந்து கொடுக்கும்.  பாம்புதாரா என்னும் பறவை சைபீரியா வில் இருந்து வருகிறது. தண்ணீருக்குள் மூழ்கும் இந்தப் பறவை சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை இரை தேடும். மீனைப் பிடித்ததும் மேலே வந்து அந்த மீனை தூக்கி வீசி, மீண்டும் தன் அலகால் பிடித்து உண்ணும்.  வர்ண நாரை குஞ்சுகள் மூன்று மாதத்தில் ஆரஞ்சு, பிங்க், வெள்ளை, கறுப்பு என நிறம் மாறிக்கொண்டே வரும். குஞ்சுகள் மீது வெயில் படாமல் இருக்க தாய்ப்பறவை இறக்கையை விரித்து இடம் கொடுக்கும். இதுபோல் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு சிறப்பு உள்ளது.

 இவை மட்டுமல்ல, இலங்கை ஐபிஸ் என்று அழைக்கப்படும் பளபளப்பான நாரைகள், ஆஸ்திரேலிய சாம்பல் நிற கூழைக் கடா, வங்கதேச திறந்தவெளி நாரைகள், வர்ணம் பூசப்பட்ட கனடா, சைபிரியா நாரை கள், நீண்ட கால்கள் கொண்ட பறவை இனமான பர்மாவின் ஸ்பூன் பில்கள்.  பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவைகளான தெற்காசியாவின் ஈரான், இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் இளஞ் சிவப்பு, சாம்பல் நிற கூழைக்கடா.வெள்ளை உடல், கருப்பு நிற கழுத்து, தலை கொண்ட வெள்ளை அரிவாள் மூக்கன், வெள்ளை உடல் இளஞ்சிவப்பு நிறத்துடன் நீண்ட மூக்கு, கால்களைக் கொண்ட அமெரிக்கா வின் அரிவாள் மூக்கன். நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் அரிவாள் போன்ற நீண்ட மூக்கை கொண்ட ‘அன்றில்’ பறவை என்று அழைக்கப்படும் ‘அரிவாள் மூக்கன்’.பழுப்பு நிற அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன் என்று விதவிதமான பறவைகளை காணலாம்.

களை கட்டுகிறது...
இலங்கை, பாகிஸ்தான், சீனா, வங்க தேசம், பர்மா, இந்தோனேஷியா, ஈரான், இராக், வங்கதேசம் என ஆசிய நாடுகளில் இருந்தும் ஐரோப்பிய கண்டத்தில் சைபிரியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளிலி ருந்தும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து நத்தை குத்தி நாரை, மத்தாளி கொக்கு, நீர் காக்கை, நீர் வாத்து, முக்குளிப்பான், ஊசி வால் பறவை என புதுமையான பறவைகள் வேடந்தாங்கல் வருகின்றன. இந்த விருந்தாளிகளுடன் உள்ளூர் ‘சூப்பர் ஸ்டார்கள்’ இணைந்து கொள் கின்றன. இதுதவிர நீர்க் கோழி, நீர் காகம், கொக்கு, புள்ளி மூக்கு வாத்து, மீன் கொத்தி, குயில், சாம்பல் நாரையும் ஏரியை முழுமை யாக அலங்கரிக்கின்றன. கலர் கலரான பறவைகளின் அழகை காண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ள தால் சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் வேடந்தாங்கல் சரணாலயம் களைக் கட்டுகிறது.  குயில் கூவும், ஆந்தை அலறும், காகம் கரையும், கிளிகள் பேசும் என்பது மரபுச் சொற்கள். ஆனால், அதிகாலையிலும், அந்தி சாயும் மாலை நேர பொழுதிலும் வேடந்தாங்க லில் ஒன்று சேரும் பறவைகளின் இனங்கள், நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், அவைகள் பாடும் மொழி ஒன்றுதான். இனிமையான அந்த சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறது.

எப்ப வரும்? எப்ப கிளம்பும்?
அக்டோபர், நவம்பரில் வலசை வருவது வழக்கம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இறைதேடிச் செல்கின்றன. பிறகு ஒன்றாகச் சங்கமிக்கின்றன. ரம்யமான சூழ்நிலை முடிந்து கோடை காலம் தொடங் கியவுடன் படிப்படியாக ஏரி நீர் வற்றத் தொடங்கும். அதற்குள் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலை வந்ததும் பிப்ரவரியிலிருந்து  ஒவ்வொரு இனமாக, “பசுமை நிறைந்த நினைவுகளுடன் பாடிய படியே” குஞ்சு களுடன் தாய் நாடுகளுக்கு திரும்பிவிடும். வானத்தில் பறக்கும் காக்கை, குருவி களை பார்ப்பதே அரிவதாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், பருவநிலை மாற்றத்தால் திசை மாறி செல்லும் நிலையில், “நாடு விட்டு நாடு வந்தோம். கூடு கட்டி வாழ வந்தோம், வேறு எங்கும் இடம் இல்லை எங்களுக்கு, வேடந்தாங்கல் மனம் நிறைந்த இன்ப எல்லை” என்று இன் முகத்துடன் வேடந்தாங்களுக்கு வருகை தரும் வெளி நாட்டு விருந்தாளிகளை பச்சை நிற பசுமை போர்த்தி வரவேற்போம்!