tamilnadu

கரமும் சிரமும்


நவகவி

சந்திரனில் பதிந்த காலே!
சாக்கடையை சுமந்த தோளே!
இருவருக்கும் -என்- சம வணக்கம்!
சுரங்கத்தை தோண்டும் கரத்தை,
சூரியனை தாண்டும் திறத்தை,
ஒருங்கிணைக்க -என்- மன விருப்பம்!
(சந்திரனில்)
இருதயத்தின் ஆழம் துழாவி
உயிரைத் தேடும் மருத்துவ ஞானி,
கழிவறையின் உள்ளே உலாவி
கசடு தேடும் துப்புரவாளி,
இருவரது நெஞ்சினிலும்....
இடம் பிடித்தாள் கலைவாணி!

விவசாயி களத்து மேடு,
விஞ்ஞானி ஆய்வு ஏடு,
இரண்டுக்கும் பொருத்தப் பாடு
இருக்கு தென மனமே பாடு! 
உழவு கோலை எழுதுகோல்...
உரசட்டுமே நட்போடு!
(சந்திரனில்)
உடலுக்கு மையம் வயிறு!
உடலுக்கு சிகரம் சிரசு!
இரண்டுக்கும் வேண்டிய உணவு
ஏந்தி வரும் உழைப்பு ;அறிவு!

வரவேற்பு வளைவு வைப்போம்...
இரண்டுக்குமே நல்வரவு!
புஜம் கொண்ட வலுவை எல்லாம்
ஒரு தட்டில் நிறுத்திப் பார்த்தேன்!
நிஜம் கண்ட அறிவை எல்லாம் 
மறுதட்டில் இருத்திப் பார்த்தேன்!

கரத்துக்கும் சிரத்துக்கும்...
சமநிலை தான் சரிபார்த்தேன்!
(சந்திரனில்)
அண்டமிதன் ஆணி வேரை
கண்டசைக்கும் அறிவியல் கரமே!
மண்டுகிற களையாம் கோரைத்த
ண்டகற்றும் உழவரின் கரமே! 
பூணுகவே இரு கரமும்... 
பொன்னொளிரும் மோதிரமே!

ஐன்ஸ்டீனின் வயலின் ஓசை,
ஆட்டிடையன் குழலின் ஓசை, 
இரண்டிலுமே ஞானம் கண்டேன்! 
எளியவனுள் வானம் கண்டேன்!
ஏவுகணை நடைவண்டி.... 
இரண்டிலுமே அறிவியல் கண்டேன்!
                                                    
(சந்திரனில்)