சென்னை:
ஊரகப்பகுதிகளில், பழுதடைந்த நிலையில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்ததன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூட்டமைப்புகள், புயல் கால குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராமக்குடில்கள் ஆகிய 300 ஊராட்சி மன்ற கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒரு கட்டிடத்துக்கு தலா ரூபாய் 19 லட்சத்து 72 ஆயிரம் வீதம், 300 கட்டிடங்களுக்கு மொத்தம், 59 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், கழிப்பிட வசதி உள்ளிட் டவை, இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஊதியமான 229 ரூபாய்
வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.