tamilnadu

img

நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்! - ஆளுநர் ரவி அடாவடியான பதில்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித் துணிக என்ற தலைப்பில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் முதல்முறையாக அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, 2023-ம் ஆண்டில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர், "தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டதால், கேள்வி எழுப்பிய மாணவரின் பெற்றோரை உட்காருங்கள் என அதட்டி, அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என அடாவடியாக பதிலளித்துள்ளார்.