சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.
முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தம் 343 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலக அளவில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளதால், போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு ரூ.92 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கி இருந்தது.
இந்நிலையில் நடைபெற இருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மேலும் ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான மொத்த செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது.