சென்னை, ஜூலை 25 - ஆன்லைன் உறுப்பினர் பதிவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி இன்று (ஜூலை 25) தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை விண்ணப்பத்தில் போன்றவற்றை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 3 வாரங்களாக இணையதளம் சரிவர செயல்படவில்லை. அண்மையில் 13 கோடி ரூபாயில் ‘சர்வர்’ மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அற்ப காரணங்களுக்காக பணப்பயன் கேட்கும் கேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. 8 லட்சம் உறுப்பினர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும். கேட்பு மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து பணப்பயன்களை தர வேண்டும், ஆன்லைன் பதிவு பட்டியலில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளவர்களை மீண்டும் உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டும், ஓய்வூதியமாக 3ஆயிரம் ரூபாய் தர வேண்டும், கைம்பெண் உதவித்தொகை பெறும் முறைசாரா தொழிலாளிக்கு நலவாரிய பணப்பயன்களை மறுக்க கூடாது, பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
உடலுழைப்பு நலவாரியங்களுக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும், இயற்கை மரணம், விபத்து மரணம் ஆகியவற்றிற்கான கேட்பு மனுக்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும், விபத்து எங்கு நடந்தாலும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், இயற்கை மரண நிதியை 2 லட்சம் ரூபாயாகவும், ஈமச்சடங்கு நிதியை 25ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக தென்சென்னை, மத்தியசென்னை மாவட்டத்திற்குட்பட்ட முறைசாரா சங்கங்களின் சார்பில் தி.நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஏ.லதா தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை போராட்டத்தை தொடங்கி வைத்தார். எஸ்.விஜயா (வீட்டுவேலை சங்கம்), செந்தில்குமார் (அமைப்புசாரா சங்கம்), உமாபதி (ஆட்டோ சங்கம்), பி.சுந்தரம், ஜெயராமன் (தையல் சங்கம்), யு.அணில்குமார் (முறைசாரா சங்கம்) உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்