சென்னை,ஜன.20- கேலோ இந்தியாவின், யோகா விளையாட்டில் தமிழ்நாட்டின் இரட்டையர்களான சர்வேஷ், தேவேஷ் முதல் தங்கம் வென்று அசத்தினர். இதுவரை 5 மாநிலங்களில் போட்டிகள் நடந்து உள்ளன. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. தடகளத்தில் அதிகபட்சமாக 47 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40, ஹாக்கியில் 36, நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேர் பங்கேற்கின்றனர்.
100 பதக்கம் வெல்ல இலக்கு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழ்நாடு அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்த முறை கூடுதல் பதக்கங்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறுகையில், “கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்கா கொண்டுள்ளோம்”என்றார். தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலம் என்று ஒட்டு மொத்தமாக 933 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில்,சனிக்கிழமையன்று (ஜன.20) ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற யோகா விளையாட்டில் ரித்மிக் ஜோடி பிரிவில் சர்வேஷ், தேவேஷ் இரட்டையர்கள் வெற்றி பெற்று தமிழகத்திற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தனர். தமிழ்நாடு அணி 127.89 புள்ளிகளை குவித்தது அசத்தினர்.