முன்னாள் மாணவர்கள் புதிய வீடு கட்டிக் கொடுத்தனர் சிதம்பரம்,
ஜூன் 13- புவனகிரி பகுதியில் நலிவடைந்து குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த தலைமை ஆசிரியைக்கு அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் புதிய வீடு கட்டி வழங்கியதை அறிந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புவனகிரி நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1981 ஆம் ஆண்டு முதல் 12 வருடம் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சந்திரா (75) என்பவர் ஓய்வு பெற்ற பிறகு வறுமையில் வாடி வந்தார். திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளில் கணவரை இழந்த இவர் புவனகிரி காரியக்கார தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். இதனையறிந்த முன்னாள் மாணவர்கள் பிரேம்ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் மற்ற முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டு உதவி பெற்று ரூ.3.5 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டினர். அவர் வாழ்ந்த இடத்திலேயே கட்டப்பட்ட இந்த வீட்டின் சாவி வெள்ளிக்கிழமை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உறவினர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியை சந்திரா நலிந்த ஆசிரியர்களை கை விடாமல் மாணவர்கள் உதவியது நெகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், இதேபோல் அனைத்து மாணவர்களும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த உதவியை அறிந்த அனைத்து தரப்பு மக்களும் முன்னாள் மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.