சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் அடுத்த வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 5 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து, முதல்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த தொழிற்சாலை கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளது. தீ விபத்து காரணமாக வள்ளுவர் கோட்டம் பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீயால் அருகில் இருந்த 3 மரங்களும் சேதமடைந்தன, சில மரங்களின் கிளைகளும் தீயில் கருகின.
இந்நிலையில், தீவிபத்து நடந்த தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜலட்சுமி, தொழிற்சாலையை நடத்தி வரும் ஒப்பந்ததாரர் சுரேஷ், தொழிற்சாலைக்கு தீவைத்திருக்கலாம் என்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தீப்பற்றி எரிந்த தொழிற்சாலை குடிசைமாற்று வாரிய கட்டிடத்தில் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதனால் தீவிபத்து நாடகமாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.