சென்னை, மார்ச் 18 - தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளியன்று (மார்ச் 18) சென்னையில் சங்கத்தின் தலைவர் சு.கலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 9ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் 16-1/2 மாத ஊதியத்தை பணிக் கொடையாக வழங்க வேண்டும் அல்லது அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாய், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகளை செய்யாதது ஏமாற்றமளிக்கிறது. சத்துணவு ஊழியர்களின் 39 ஆண்டுகால வாழ்க்கை போராட்டத்தில் விடியலை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் தலையிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் உரிய அறிவிப்புகளை செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்; நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் ஏ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.