tamilnadu

1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தினால் போராடுவோம்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

சென்னை, மே 6- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை தாங்கினார். மதுரை மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை வரவேற்றார். கூட்டத்தில் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரையாற்றினார். ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள் குறித்து மாநில நிதிக்காப்பாளர் ச.மோசஸ் உரையாற்றினார். சங்கத்தின் வரவு - செலவு குறித்து மாநிலப்பொருளாளர் க.ஜோதிபாபு விளக்கிப் பேசினார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் கூறியதாவது:-23.08.2010 க்குப் பிறகு ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு குடும்பநலன் கருதி ஊதியத்தை நிறுத்தக் கூடாது. 8 ஆண்டுகாலம் ஆசிரியர் களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும். இவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும்.மேலும், இவர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அரசு வழங்கிய ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள். எனவே, தகுதித் தேர்விலிருந்து இவர்களுக்கு விலக்களித்து அவர்களது பணிநியமன நாள் முதல் பணிவரன்முறை செய்திட மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு முன்வரவேண்டும்.ஜனநாயக ரீதியில் கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் தமிழகஅரசு உடனடியாகக் கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டக்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள முற்றிலும் உண்மைக்கு மாறான பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த முன் பருவ வகுப்புகளை 2019 - 20 ஆம் கல்வியாண்டிலேயே துவங்க வேண்டும். அவ்வாறு துவங்கப்படும் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் முன்பருவ ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வை அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி சார்பில்  07.06.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;