tamilnadu

img

நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக. 5- விவசாயிகளின் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்கடேசன், நிர்வாகிகள் உதயகுமார், பேபி, உழவர் பேரவை மாவட்ட நிர்வாகிகள், வாக்கடை புருஷோத்தமன், ஜே.சிவா, வி.என்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விவசாயிகள் விடுதலை சட்டம் 2018, மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் 2018 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பழைய கடன்களுக்கு நெருக்கடி தராமல் புதிய கடன்களை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும், வறுமையில் சிக்கி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை உணர்த்தும் விதமாக, தாலிக்கயிறு, குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை தரையில் வீசியெறிந்து கோஷமிட்டனர். இறுதியில் கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும், ஆட்சியர் வழியாக குடியரசுத் தலைவருக்கும் சங்க நிர்வாகிகள் அளித்தனர்.