tamilnadu

img

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

50 ஆண்டு பழமை வாய்ந்த மாநிலக் கல்லூரி வளாகத்தில், வி.பி.சிங் அவர்களின் அருமை நண்பர், கலைஞர் அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கின்ற கடற்கரை சாலையில் சமூகநீதியின் சின்னமாம் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

11 மாத காலத்தின் சாதனைப் பட்டியல்
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்தியபோது, சில ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தார்கள். வன்முறை போராட்டங்களையும் நடத்தினார்கள். அதேநேரத்தில், கலைஞர் தலைமையில் இதே கலைவாணர் அரங்க த்தில் ஒரு கவியரங்கம் நடந்தது. மிகுந்த கோபத்துடன் அன்றைய நாள் கவிதை கர்ஜனை செய்தார் கலைஞர். அந்தக் கவிதையின் சில வரிகளை மட்டும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்...

“மண்டல் குழு பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா! மனிதாபிமானி வி.பி.சிங்கிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் திருவிழா!” என்று தொடங்கி, சமூகநீதிக்கான குரலாக  கலைஞருடைய கவிதை வரிகள் அனல் தெறித்தது!

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் அவன் உயர்சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள்ளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன? களிமண்ணா? சுண்ணாம்பா? கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக - இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவர் கட்டை  வேகும்” என்று  கலைஞருடைய பேச்சில், உணர்ச்சி கொந்தளித்தது! இப்போதுகூட இந்த கலைவாணர் அரங்கத்தில் அந்தக் கவிதை வரிகளின் வெப்பத்தை என்னால் உணர முடிகிறது!

வி.பி. சிங் அவர்களுக்கு தாய் வீடு, உத்தரப்பிர தேசம் என்றால், தமிழ்நாடுதான், தந்தை வீடு! தந்தை  பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவருடைய பேச்சு  இருக்காது. அதுனால்தான் அப்படிப்பட்ட தந்தை  பெரியாருடைய சமூகநீதி மண்ணில் வி.பி.சிங்  அவர்களுக்கு முதன்முதலாக சிலை அமைக்கப்பட்டு ள்ளது. நானும், மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களும் இரண்டு முறை சந்தித்து இருக்கிறோம்.

சமூக நீதி கதவை திறந்தவர்

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங் அவர்கள். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங்.

 வி.பி.சிங் அவர்களைப் பற்றியும், அவரது தியாக வாழ்க்கைப் பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவருடைய வாழ்வு  திரும்பத் திரும்ப சொல்லப்படவேண்டும். அதனால்தான் மாநில கல்லூரியில் அவருடைய சிலையை அமைத்திருக்கிறோம்.

வி.பி.சிங் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய ஜமீன்தாருக்கு மகனாக பிறந்து, ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனது ஒட்டாமல்  கல்லூரி படிக்கின்ற காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். வினோபா அவர்களிடம் தன்னுடைய நிலங்களையே தானமாக வழங்கினார்.

1969-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர், இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை  அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். தேசிய  முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.

மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது பதினோரு மாதம்தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை! இந்திய அரசி யலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு தரப்பட வில்லை. அதை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்!

சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படு கின்ற சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல் படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள்.

வி.பி.சிங் அவர்கள் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல! ஏன், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல! ஆனாலும் ஏழை – எளிய, பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக் காக இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டி யவர்! அப்போது நாடாளுமன்றத்தில் தந்தை பெரி யார் – புரட்சியாளர் அம்பேத்கர் – ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் அவர்கள் குறிப்பிட்டார். தந்தை பெரியாருக்குத் தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். பதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில்,

u பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு
u தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி
u தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி
u வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக உருவாக்கியது
u லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள்
u தேர்தல் சீர்திருத்தங்கள்
u அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது
u நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம்
u மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்
u உழவர்கள் பிரச்சனையைத் தீர்க்க மூன்று குழுக்கள்
u தில்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்
u அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிட உத்தரவு
u நுகர்வோர் பாதுகாப்பு

இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது!

இப்படி பல சாதனைகளை செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான்  வி.பி.சிங் அவர்கள்.   வி.பி.சிங் அவர்களின் முயற்சியால்தான் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியிருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்லவேண்டும்.

நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமை யாக கிடைக்காத – கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது! குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

இன்றும் இடஒதுக்கீடு இல்லாத மத்திய சட்டப் பல்கலை.

பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப் பிரிவு! ஒன்றிய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்சாதியினர். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச்  சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும்தான்! பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்! அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல் கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான்நீடிக்கிறது.

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான்! இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.

சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதி மன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட வில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வு களின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம்  செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கம்!

சாவை விடக் கொடுமை
 “ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமை யானது ‘அவமானம்’. அந்த அவமானத்தைத் துடைக் கின்ற மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள். கலைஞர் அவர் களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.“காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர் அவர்கள்தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதலமைச்சர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னுடன் இருந்தவர் கலைஞர் அவர்கள்” என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்

காவிரி நடுவர் மன்றம்

தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பிரச்சனையான காவிரி நீருக்காக பல ஆண்டுக்கு பிறகு, பல போராட்ட த்திற்கு பிறகு, தலைவர் கலைஞருடைய கோரிக்கை ஏற்று, வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்தார்.

அதேபோல், இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எவ்வளவு அக்கறையோடு நடந்துகொண்டார் என்றால், தன்னுடைய வீட்டிலேயே அகில இந்தியத் தலைவர் களையும் – மாநில முதலமைச்சர்களையும் 1990-ஆம்  ஆண்டு கூட்டினார்.

9 மாநில முதலமைச்சர்கள் – 7 ஒன்றிய அமைச்சர் கள் – 5 அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோரையும் வரவழைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரைத் தான் பேசச் சொன்னார் பிரதமர் வி.பி.சிங். பேசச் சொன்னதற்கு பிறகு சொல்கிறார், ‘இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என்னுடைய கருத்து’ என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

கலைஞர் அவர்கள் மீதும், தமிழினத்தின் மீதும்  வி.பி.சிங் அவர்கள் எந்தளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையில்லை!

தேசிய ஒருமைப்பாட்டுக்  கவுன்சில் கூட்டம்

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன்.
“தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் தில்லியில் தான் கூட்டணுமா? மாநிலங்களில் கூட்டலாமே?” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோரிக்கை வைத்தார். ‘அப்படியென்றால், தமிழ்நாட்டில் நடத்து வீர்களா?’ என்று பிரதமர் வி.பி.சிங் கேட்டார். உடனே,  சரி என்று சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது என்பது வரலாறு! நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் அடிக்கடி பிரதமர் வி.பி.சிங் சொல்வது, “நீங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு தில்லிக்கு வரக்கூடாது, சென்னையில் இருந்து சொன்னால் போதும்” என்று சொன்னவர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். எத்தகைய வசந்த காலங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

அதேபோன்ற காலம் இனியும் வரவேண்டும். அது நாம் ஒன்றிணைந்து உழைத்தால் முடியும்! வி.பி.சிங்  அவர்கள் உடல்நலிந்த நிலையில்கூட தில்லி மக்களு டைய குடியிருப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்! ‘அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்பதே இல்லை’ என்று கம்பீரமாக சொன்னவர். ஏற்றுக் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த வி.பி.சிங் அவர்கள், உடல்நலக்குறைவால் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் மறைந்தார்.
வி.பி.சிங் அவர்களுடைய மறைவு இந்தியாவுக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு! சமூகநீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்!

எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம்...

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை  இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்சனை! ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள்  வேறுபடலாம். ஆனால் பிரச்சனை ஒன்றுதான்! அது தான், புறக்கணிப்பு! எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை –அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி! அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகளை சொல்லி, நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அந்தக் கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப் பட வேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதி மொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின - பழங்குடியின – சிறுபான்மை - விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக் கான “அரசியல் செயல்திட்டங்கள்” “அரசின் செயல்திட்டங்களாக” மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!”