tamilnadu

ரயிலில் மின் தடை: பயணிக்கு ரூ.10 ஆயிரம் நட்டஈடு வழங்க உத்தரவு

சென்னை, மே 13-ரயிலில் ஏற்பட்ட மின் தடையால் அவதியடைந்த பயணிக்கு ரூ.10 ஆயிரம் நட்டஈடு வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பதியிலிருந்து சென்னைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி புறப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பால்ராஜ் என்பவர் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தார். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பயணம் செய்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டது.மாலை 5.50 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு 8.25 மணி வரை சரியாகவில்லை. சுமார் 2 மணி நேரம் மின் தடையால் அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின் விசிறிகளும் ஓடவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இருளில் குழந்தைகளை தொலைத்து விடக்கூடாது என்ற அச்சமும் அவர்களை வாட்டியது.ரயில் அரக்கோணம் வந்ததும் ஊழியர்கள் வந்து பழுது பார்த்து மின் தடையை சரி செய்தனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் மின் தடையால் அவதியடைந்த பால்ராஜ் சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் சமரச தீர்வு மையத்தில் புகார் செய்தார்.அதில், மின் தடையால் அவதியடைந்த எனக்கு நட்டஈடாக ரூ.3 லட்சம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் நுகர் வோர் சமரசத்தீர்வு மையம் விசாரணை நடத்தியது. அப்போது புகாரில் குறிப்பிட்டிருந்த பெட்டியில் மின் தடை ஏற்பட்டதை தெற்கு ரயில்வே ஒப்புக் கொண்டது. ரயில் இயக்க கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், மின் தடை புகார் வந்ததும் அடுத்த நிறுத்தத்திலேயே ஊழியர்களால் சரி பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட நுகர்வோர் சமரச தீர்வு மைய தலைவர் லட்சுமிகாந்தம், புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க தென்னக ரயில்வேக்கு உத்தரவிட்டார்.

;