வேலூர், ஜூலை 10- சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். இதை யடுத்து அதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜஸ்தான் மாநி லத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வாட்டர் வேகன்’ ராஜஸ்தானில் இருந்து ஜோலார்பேட்டை சரக்கு ரயில் நிற்கும் 5ஆவது யார்டை வந்தடைந்தது. ஒவ்வொரு வேகனிலும் 54 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் நிரப்ப முடியும். இந்த ரயிலில் மொத்தம் 50 வேகன்கள் உள்ளன. சென்னை நகர மக்களுக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சோதனை ஓட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. குழாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்தபின்னர் சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.