மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 98வது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் 98வது பிறந்தநாளையொட்டி, இன்று (15-7-2019) காலை, சென்னை, குரோம்பேட்டையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., இ.கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
அவரின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்துச் செய்தியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவ்வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-
பழுத்த அனுபவமுள்ள மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெரியவர் திரு என்.சங்கரய்யா அவர்களுக்கு 98 ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கடலாகக் காட்சியளிப்பவர். ஏழை எளிய அடித்தட்டு மக்களின் உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைக் குரலாக ஒலிப்பவர். நேர்மையான அரசியலின் நிலைக்கண்ணாடியாகப் பொதுவாழ்வில் திகழ்பவர். பொது வாழ்விற்குத் தேவையான அருங்குணங்களைப் பெற்றவருக்கு 98 ஆவது பிறந்தநாள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்களுடனும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மிகுந்த நட்பு பாராட்டி - இன்றைக்கும் தோழமையின் சிகரமாக விளங்குபவர். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தி.மு.க உறவு, அரசியல் ரீதியான உறவு ஆகியவற்றையெல்லாம் தாண்டியது எங்கள் இருவரது நட்பு” என்று தலைவர் கலைஞர் அவர்களுடனான தனது நட்பு பற்றி திரு சங்கரய்யா அவர்கள், “இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் நிலைத்து நிற்கிறது. திரு.சங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே ஒரு தனிச்சிறப்பு என்பது மட்டுமின்றி - நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன். அய்யா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து நீடூழி வாழ வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.