கடலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.116.63 கோடி கடன்
கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ரூ.116.63 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் புதன்கிழமை (ஜூன் 11) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மகளிர் திட்டம் வாயிலாக 1253 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.116.43 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.அனு, பயிற்சி ஆட்சியர் மாலதி, மாநகராட்சி மண்டல தலைவர் சங்கிதா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.