க.பொன்முடி சர்ச்சை பேச்சு டிஜிபி, காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு
சென்னை, ஜூன் 13- முன்னாள் அமைச்சர் க.பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்தப் பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்க டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.