விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
சென்னை கெல்லீஸ் சந்திப்பில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சட்டப்பேரவையிலும் விக்னேஷ் மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் மரணமானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மொத்தம் 6 காவலர்களை எஸ். சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைதான 6 காவலர்களையும் வரும் மே 20 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து விக்னேஷின் குடும்பத்தில் சாதி சான்றிதழை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் அவரது சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.