tamilnadu

அவதிப்படும் தயாகம் திரும்பியோரும் கொள்ளைபோகும் கூட்டுறவு வங்கியும்

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற வரிகளை வாழ்க்கை வழியாகக் கொண்டு, தமிழர்கள் உலகம் முழுவதும் வியாபார நிமித்தமாக சென்று, வென்று வாழ்க்கையை வளமாக்கிக் கொண்ட வரலாறு படைத்தவர்கள். அதுமட்டுமல்லாமல் வறுமையின் காரண மாக புலம்பெயர்ந்து சென்றவர்களும் உண்டு.  தமிழகத்தின் தஞ்சை, ராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து பர்மாவிற்கும், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து இலங்கைக்கும் பஞ்சம் பிழைக்க தமிழர்கள் சென்றார்கள். தமிழர்கள் தங்கள் ரத்தம் சொறிந்து சென்ற நாடுகளை எல்லாம் செழிப்பாக்கினர். உலகப் போர் நடைபெற்றபொழுது பர்மா தாக்கு தலுக்கு அஞ்சி தாயகம் திரும்பியோர் பட்ட பாடுகளை கலைஞரின் பராசக்தியில் பார்த்திருக்கிறோம். 1960களில் பர்மாவில் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கங்காணிகள் மூலம் அடர்ந்த காடுகளை திருத்தி தேயிலைத் தோட்டங்களாக மாற்ற இலங்கை சென்றத் தமிழர்கள் குடியுரிமை இன்றி, நாடற்றவர்களாக அல்லலுற்று கிடந்தபோது சிறிமாவோ, சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்த பின்புலம் கொண்ட தாயகம் திரும்பிய மக்களுக்காக சென்னையை நாடாகக் கொண்டு தென்னாடு முழுவதும் எல்லைகளாக வைத்து அரசின் முயற்சியால் 1960ஆம் ஆண்டு தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி (ரெப்கோ) அன்றைய முதல்வர் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்டது. தாயகம் திரும்பிய மக்கள் மட்டுமல்லாமல் 1980களுக்கு பின்னால் அகதிகளாக வந்தவர்களுக்கும் ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இந்த வங்கியின் மூலமாக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.  ரெப்கோ வங்கி மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வங்கியின் தலைவராக தமிழக முதல்வரின் தனிச் செயலர் பி.செந்தில்குமார் உள்ளார். வங்கியின் மூத்த அதிகாரிகளை புறந்தள்ளி அதிமுகவை சேர்ந்த பெண்மணி ஒருவரை மேலாண்மை இயக்குனராக்கியுள்ளனர். 50 ஆண்டுகளாக தாயகம் திரும்பியோர் மட்டுமே வங்கியில் வாக்களிக்கும் உரிமை இருந்தது. தனியார்மயத்தை வேகப்படுத்த அவசர அவசரமாக மற்றவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய பங்கு களை கடந்த 5 மாதங்களாக வழங்கி வருகிறார்கள்.  பிஇ பண்ட் போன்ற வெளிநாட்டு அமைப்புகளும் வாக்களிக்கும் உரிமை யுடன் கூடிய பங்குகளை வாங்கலாம் என்ற இந்த பகல் கொள்ளையை, பாதக செயல்களை சுட்டிக்காட்டும் தாயகம் திரும்பியோர் மற்றும் வங்கி மூத்த அதிகாரிகள் நீக்கம் செய்யப்படுவதுடன், சிபிஐ, சிபிசிஐடி வழக்குகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அனைத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் பழனி (உதவி பொது மேலாளர்), தாழ்த்தப்பட்ட ஊழியர் சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் (சிறப்பு மேலாளர்), செயல் இயக்குநர் டாக்டர் திருவேங்கடம் (நிர்வாக இயக்குநர்), பேரவை பிரதி நிதிகள் தனபால், செல்வரத்தினம் என பாதிக்கப்பட்டவர் பட்டியல் நீளும்.  தாயகம் திரும்பியோருக்கு வீட்டு வசதி கடனை முன்னுரிமைப்படுத்தி, வழங்குவ தற்காக ரெப்கோ விட்டு வசதி நிறுவனம் 2000ஆம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வர் கலைஞரின் முயற்சியின் காரணமாக துவக்கப்பட்டது. இந்திய அரசு நிறுவன மான தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் நூறு சதவிகித பங்களிப்புடன், இந்த விட்டு வசதி கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. தற்போது ரெப்கோ விட்டு வசதி கடன் நிறுவனத்தில் வங்கியின் மூலதனம் நூறு சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக குறைக்கப்பட்டு முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டு தனியார்மயமாகும் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு நிறுவனங்கள் இருப்பதே சொற்பம். சேலம் உருக்காலை யும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன மும் தனியார்மயமாக்க முயன்ற போதெல்லாம் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தாயகம் திரும்பிய தமிழர்களை முன்னிலைப்படு த்தி துவக்கப்பட்டு ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் லாபகரமாக செயல்பட்டுவரும் அரசு நிறுவனம், காதும் காதும் வைத்ததுபோல் தனியார் மயமாகிக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் தற்போது 30 லட்சம் தாயகம் திரும்பியோர் வீடின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் 30,000 மலையக தமிழர்கள் நாடற்றவர்களாக 10க்கு 10 அடி கொண்ட சிமெண்ட் கூரை யின் வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்காக துவக்கப்பட்ட ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வரதராஜனின் வருமானம், 2015 - 16, 2016 - 17 ஆண்டு களில் முறையே ரூ.1.86 கோடி, ரூ.2.35 கோடி. இரண்டு ஆண்டுகளில் சம்பளம் தவிர நிறுவன பங்கு ஒதுக்கீட்டில் 475 ஊழியர்கள் மட்டும் பெற்ற வருமானம் ரூ. 200 கோடி. இதில் தாயகம் திருப்பியோர் எவரும் இல்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மிக சொற்பம்.  தமிழர்களால் தமிழர்களுக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட தாயகம் திரும்பியோர் நிறுவனங்களின் இன்றைய நிலை இதுதான். இந்நிலையை மாற்ற, இழிநிலை நீக்க, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மயத்தை தடுத்து நிறுத்தி - கொள்ளையர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றி பரிதவிக்கும் தாயகம் திரும்பியோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழக அதிகாரிகள், அகதிகள் வாழ்வினை மீட்டெடுக்க வேண்டும். - திரு