tamilnadu

img

யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை புதூர் சூர்யாநகரை அடுத்த குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் மாரிதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. ஆட்சி குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணின், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து மாரிதாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வழக்கு குறித்த விவரங்களை தெரிவித்து கைது செய்வதாக தெரிவித்தனர். பின்னர் தேனி உத்தமபாளையம் கிளைச் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே அவரை வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த புகாரில் கைதான மாரிதாஸ் இன்று எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை டிச. 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாரிதாஸை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

;