கோவையில் காந்தி நினைவு தின உறுதிமொழியேற்பு நிகழ்வின் போது காந்தியை கொன்ற கோட்சே என முழங்ககூடாது என தடுத்த காவல்துறையின் செயலுக்கு மக்கள் சிவில் உரிமை கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் சிவில் உரிமை கழக மாநிலத்தலைவர் கண.குறிஞ்சி அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக, கடந்த ஜனவரி 30, காந்தி நினைவு நாளன்று அஞ்சலியும், மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், காந்திஜியின் கொலைக்கு கோட்சே மற்றும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளே காரணம் என்ற பொருளுணர்த்தும் உறுதிமொழி வாசகங்களை வாசிக்கும் போது, கோவை மத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணா ஆகியோர் குறுக்கிட்டு தடுத்துள்ளனர்.
உறுதிமொழியேற்பின் போது பொது அமைதிக்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்காத நிலையில், உறுதி மொழி வாசகங்கள் காவல்துறைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கருத்துரிமை குறித்தோ, கேதர்நாத் சிங் எதிர் பீகார் மாநிலம் (1962) உள்ளிட்ட வழக்குகளில் கருத்துரிமையை உயர்த்திப் பிடிக்கும் நீதிமன்றங்களின் குறித்தோ கோவை காவல்துறையினர் அறிந்திருக்காதது வியப்பளிக்கிறது.
காவல்துறை உதவி ஆணையர் ஒருவரே, இப்படி குறுக்கீடு செய்தது உண்மையில் கோவை காவல்துறை, மதச்சார்புள்ள அமைப்புகளுக்கு அடிபணிவதையே காட்டுகிறது. கோவை காவல்துறையின் இந்தப் போக்கு ஆபத்தானது: கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரின் மீது, உள்துறையை நிர்வகிக்கும் தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குறித்த, விரிவான பயிற்சிகளை காவல்துறையினருக்கு அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகக் காவல்துறை, ஜனநாயக வழியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, பாரபட்சமின்றி உரிய பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.