tamilnadu

img

தொழிலாளர்களின் ஒற்றுமையும், வலிமையும்தான் வெற்றியை தீர்மானிக்கும் உரிமைக்குரல் மாநாட்டில் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு

சென்னை, ஆக. 27- தொழிலாளர்களின் ஒற்றுமையும், வலிமையும்தான் வெற்றியை தீர்மானிக்கிறது என்று உரிமை குரல் தொழிற்சங்க மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு “ஓட்டுநர்களின் உணர் வெழுச்சி மாநாடு” என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் செவ்வாயன்று (ஆக. 27) நடைபெற்றது.

மாநிலத் தலைவர் இ.சே.சுடர்வேந்தன் (எ) சுரேந்தர் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.முரளி  வரவேற்றார்.

இதில் கலந்து கொண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகை யில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து  தொழிற்சங்களையும் அழைத்து கூட்டம் நடத்தி  அவர்களது கோரிக்கையை கேட்டறிந்து அதில்  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 

ஓட்டுநர் நல வாரியத்தில் பணப்பயன்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று,  விபத்தில் மரணமடைந்தால் 1 லட்ச ரூபாய் என்பதை 2 லட்ச ரூபாயாகவும், இயற்கை மரணத்திற்கு 20 ஆயிரம் என்பதை 50 ஆயிரம்  ரூபாயாகவும், மகப்பேறுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பதை 18 ஆயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1,700 ரூபாயாக வும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் 89,250 பயனாளி களுக்கு 58 கோடியே 69 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் வாரியத்தில் புதிதாக 86,780 பேர்  சேர்ந்துள்ளனர். தற்போது வாரிய உறுப்பினர் களின் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 664ஆக உள்ளது. வாரியத்தில் உறுப்பினர்களாக சேராதவர்கள் உடனடியாக சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆட்டோ, கால் டாக்சி செயலியை அரசே உருவாக்க வேண்டும் கட்டுமான தொழிலா ளர்கள் மரமணமடைந்தால் 5 லட்சம் ரூபாய் வழங்குவது போல், ஓட்டுநர்களுக்கும் 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்  வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை முதலமைச் சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசுகையில், உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இருக்கிறதா என்றால் இல்லை.  தொழிலாளர்களால் ஏற்படக் கூடிய பலனை,  லாபத்தை ஒரு சிலர் அடைந்து கொண்டிரு பதற்கு காரணம் ஆட்சியாளர்களின் கொள்கை தான். மோட்டார் வாகன தொழில் என்றாலே ஓட்டுநர் மட்டுமல்லாது, பழுது பார்ப்பவர், ஓட்டு நர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள் என பல்லா யிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். அதிக பணத்தை மோட்டார் வாகனம் மூலம் ஈட்ட  முடியும் என அரசு கருதுவதால், வாகன வரி,  காப்பீட்டு வரி கூடுதலாக வரி வசூலிக்கப்படு கிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் தொழிலாளர்கள் போராடு வார்கள். ஆனால் இப்போது உரிமையாளர்களே சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களும் போராடுகிறார்கள்.

மோட்டார் வாகன தொழில் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இறுதியாக மோட்டார் வாகன  சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததில் அக்ரிகேட்டர் என்ற பெயரில் சிறு உடைமை யாளர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட் டுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து வாகன திருத்தச் சட்டத்தை ஏற்கக் கூடாது, அதை முறியடிக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தோம். அதன் விளைவாக சில ஆண்டுகள் அந்த திருத்தங்களை அமல் படுத்தாமல் ஒத்தி வைத்தார்கள். ஆனால் தற்போது அந்த திருத்தங்கள் அமலுக்கு வந்து  விட்டன.  

ஆட்டோ ஓட்டுநர்கள், சுயமாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், வாகன பழுது பார்ப்பவர்கள் ஆகியோரின் தொழிலை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் அக்ரிகேட்டர் என்ற  பெயரில் இவர்கள் உழைப்பின் பலனை ஒரு  சிலர் மட்டும் எடுத்து செல்வது என்ன நியாயம்  என்று கேள்வி எழுப்பினார்.

கேரளாவில், மேற்கு வங்கத்தில் உள்ளது  போல் தமிழ்நாடு அரசும் செயலியை உருவாக்க  முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போதுதான் ஓலா, உபேர் போன்ற  கார்ப்பரேட் நிறுவனங்களால் உறிஞ்சப்படும் தொழிளார்களின் உழைப்பு சுரண்டல் தடுக்கப்படும். மேலும் புதிய திருத்தங்களை கொண்டு வந்து, ஒரு குற்றத்திற்கு 3 ஆண்டுகள் என்று இருந்த சிறை தண்டனையை 10 ஆண்டுகள் என மாற்றியுள்ளார்கள். கொலை செய்பவனுக்கு கூட 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆனால் சாலையில் நடைபெறும் ஒரு விபத்துதான் மரணத்திற்கு காரணம் எனக் கூறி இப்படி சிறை  தண்டனை விதிப்பதையும், ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிப்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த  சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வட மாநிலங்களில் ஓட்டுநர்கள் ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 ஆண்டு சிறை என்பதை அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவித்திருக்கிறது.

தொழிலாளர்களின் ஒற்றுமையும், வலிமையும்தான் கோரிக்கைகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். சிஐடியு அகில இந்திய அளவில் போக்குவரத்துடன் தொடர்புடைய அனைத்து சங்கங்களையும், அமைப்புகளையும் இணைத்து சம்மேளனத்தை உருவாக்கி இருக்கிறது. பல நாடுகளில் வாகன ஓட்டுநர்களின் போராட்டத்தால் அந்த  ஆட்சியே தூக்கி எறியப்பட்டுள்ளது. சங்கம்  என்பது தொழிலாளியின் ஆயுதம், அடையாளம்  என்பதை நாம் ஒவ்வொரு தொழிலாளியிடமும் எடுத்துக் கூற வேண்டும். தொழிலாளி வர்க்கம்  என்ற அடிப்படையில் அனைவரும் ஒரு  குடையின் கீழ் திரள வேண்டும், அப்போது தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றார் அ.சவுந்தரராசன். 

இதில் சங்க காப்பாளர்கள் ஜி.சக்திவேல் (எஸ்.எஸ்.எல்.எப். பவுண்டேஷன்), எம்.பஷிர் அகமது (இந்திய தேசிய லீக்), சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர்ஹூசைன், பொருளாளர் எஸ்.பத்ரகாளிமுத்து, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.முரளிதரன், சிஐடியு ஆட்டோ சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி,  ஏஐடியுசி ஆட்டோ சம்மேளன பொதுச்செய லாளர் பி.மாரியப்பன், மு.சம்பத், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்த்தின்  தலைவர் ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர். தென் சென்னை ஆட்டோ பிரிவு மாவட்டச்  செயலாளர் சி.சதீஷ்பாபு நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,  புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயர்வுக்கு காரண மான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆட்டோ, கால்டாக்சி செயலியை அரசே துவங்க  வேண்டும், ஓட்டுநர்கள் விபத்தில் மரணமடைந் தால் வழங்கப்படும் நிதியை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநிலத் தலைவராக இ.சே.சுடர்வேந்தன் (எ) சுரேந்தர், பொதுச்செயலாளராக அ.ஜாஹீர்ஹூசைன், பொருளாளராக  எஸ்.பத்ர காளிமுத்து உள்ளிட்ட்டு 25 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மாநில நிர்வாகிகள் கே.அப்துல் காதர் ஜிலானி, ஜி.சபரிநாதன், கே.மாணிக்கம், எம்.ராஜா, ஜி.வேல்முருகன், வி.கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.