tamilnadu

தமிழக மீனவர்களுக்கு தொடரும் அநீதி பிரதமர் தலையிட வேண்டும்!

சென்னை, பிப். 18 - தமிழக மீனவர்கள், இலங்கை கடற் படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் சம்பவங்கள் தொடர்  நிகழ்வாகி வரும் நிலையில், இப்பிரச்சனை யில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4 அன்று இராமேஸ்வ ரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 23 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும்  இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. அப் போது, கைது செய்யப்பட்ட 20 மீன வர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப் படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், தங்களுடைய படகு களில் கருப்பு கொடி கட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இதனால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படை யால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த  இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நட வடிக்கைகள் அதிகரித்துள்ளன. மேலும், தொடர்ந்து எல்லை தாண்டி யதாக மூன்று மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது மற்றும் விபரீதமானது.

இது, தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அது மட்டுமன்றி மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசிய மயமாக்குவது, மீனவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பை அபகரிப்பதாகும்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  தலையிட வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடி யும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் படகுகள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், “மீனவர்களின் நலனைக் காக்க முன்னுரிமை அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இலங்கைச் சிறையில் உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைக்குரிய இந்தியர்கள்” என்றும் சுட்டிக்காட்டி யுள்ளார்.