சென்னை மேயர் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியில் வைத்து பணம் கேட்ட கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வைத்துக் கொண்டு அதிகாரிகளிடம் பணம் கேட்டதாக செய்திகள் வெளியானது.
இதுபற்றி தகவலறிந்து மேயர் பிரியா ராஜன் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பணம் கேட்டு வரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக மாவட்ட ஆட்சியர்களின் புகைப்படங்களை வாட்ஸ்-அப் முகப்பு புகைப்படமாக வைத்து அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடம் பணம் கேட்டு எஸ்.எம்.எஸ் வந்துள்ளன. மேலும் அமேசான் நிறுவனத்தில் கிப்ட் கூப்பன் வாங்கி தனது வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
புதிய வாட்ஸ்-அப் என்பதால் சக அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அந்த நம்பருக்கு போன் செய்தால் யாரோ ஒருவர் இந்தியில் பேசுவதாக கூறப்பட்டது. உடனே இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இதேபோல் வேலூர், திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களில் மோசடி அரங்கேறியது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்கள், போலி வாட்ஸ்-அப் எண்ணை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான தகவல் என்று தெரிந்தால் உடனே போலீசில் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.