சென்னை, மே 27-சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பை யொட்டி 50 சொகுசு ஏ.சி. பேருந்துகள் விரைவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஏ.சி. சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஏ.சி. பேருந்துகளை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இதனால் அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், தரமணி பகுதிகளை மையமாக வைத்து ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட்டன. தி.நகரிலிருந்து காஞ்சிபுரத்திற்கும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டன.கட்டணம் அதிகமாக இருந்ததால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய தயங்கினார்கள். சென்னை மாநகரில் வால்வோ ஏசி பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் அதனை முறையாக பராமரிக்காததால் தொடர்ந்து இயக்க முடியவில்லை.5 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு பின்னர் ஓரம் கட்டப்பட்டன. அதன்பிறகு ஏ.சி பேருந்துகள் மாநகரத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தன.இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏ.சி. பேருந்து பயணத்தை மக்கள் விரும்புகின்றனர். பயணிகளின் எதிர் பார்ப்பும் தேவையும் வெயிலின் தாக் கத்தால் அதிகரித்துள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு 50 ஏ.சி.சொகுசு பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு அரசு ஒதுக்கியிருக்கிறது.இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி.பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றி அரசுக்கு தெரிவித்தோம். அதனை பரிசீலித்து 50 ஏசி பேருந்துகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்துவருகிறது. விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.