tamilnadu

img

காவிக்கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் - இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!

காவிக்கூடாரமாக மாறிவரும் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 17/11/2023 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் "தீபோத்சவ்-2023" என்னும் பெயரில் தீபாவளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது  பல்கலைக்கழகத்தின் கலையரங்க மேடை ஜெய் ஸ்ரீராம் வாசகங்களால் அலங்கரிக்கப்பட்டு, முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன. வெளியிலிருந்து  புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு பூஜை உள்ளிட்ட சடங்குகளும்  செய்யப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும், மதம் சார்ந்த விழாக்கள் அரசு செலவில் நடத்தப்படக்கூடாது என்னும் அரசியலமைப்புச் சட்ட விதிமுறையை மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த யாக பூஜையில் புரோகிதச் சடங்குகளின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தரே பங்கேற்றுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதவாதச் செயலுக்குக் கொடி பிடிக்கும் நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியப் பல்கலைக்கழகக் கிளை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு  ஏபிவிபி எதிர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தந்தை பெரியாரை "காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர்" என்றும் "இந்த நிலமெங்கும் இருளைப் பரப்பியவர்" என்றும் குறிப்பிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை மத்திய கல்வி நிறுவனங்களை மதவாதிகளின் பயிற்சிப் பட்டறையாக மாற்றும் நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விரிவாக்கம் தான் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாக பூஜையில் பங்கெடுத்தது. அறிவியல் அடிப்படையிலான கல்வியை மறுத்து அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகளைப் புகுத்துவதும், கல்வி நிறுவனங்களில் சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த பிரிவினைக் கருத்துகளை விதைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்வி நிலையங்களில் அதற்கான வேலையைப் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி செய்து வருகிறது.

பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மத்தியில் மதவாதத்தை விதைத்து கல்வி நிறுவனங்களைக் காவிக்கூடாரமாக மாற்றத் துடிக்கும் அடிப்படை மதவாதிகளின் நயவஞ்சகச் செயலைத்   தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும்,  தந்தை பெரியாரை அவமதிக்கும் நோக்கில் ஏபிவிபி என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ள மத அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  கல்வி நிலையங்களில் மாணவர்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் கல்வி நிலையங்களில் மத நிகழ்ச்சிகளை ஊக்குவித்து யாக பூஜையில் பங்கெடுத்த துணைவேந்தரையும் பொது நிகழ்ச்சிகளை மத நிகழ்ச்சிகளாக மாற்றியதையும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.