சென்னை:
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட எம்எல்ஏ பிரபு தன்னை கடத்தவில்லை என்றும் முழு சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டதாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததால் ஆட்கொணர்வு மனு வழக்கை நீதிமன்றம் முடித்து
வைத்தது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.எம்எல்ஏ பிரபு தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை அக்டோபர் 8ஆம் தேதி வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர்.இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று (அக்.9) நடைபெற்றது.
முன்னதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றம் வருகை தந்தார். அதையடுத்து நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கலந்துபேசி இறுதிமுடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி அவகாசம் அளித்து தீர்ப்பை தள்ளி வைத்தனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால் சுவாமி நாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்குவிசாரணையை முடித்து வைத்தனர்.