தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூர் வரை பாஜக வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார், பாலமுருகன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு கொரோனா பரவலை சுட்டிக்காட்டி வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்பட்டால் அரசின் முடிவை எதிர்த்து பாஜக வழக்கு தொடலாம் என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.