tamilnadu

img

பாஜகவினர் வன்முறை: சிபிஐ கண்டனம்...

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு கருப்புக் கொடி காட்டுகிறோம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட முயன்ற மதவெறிக் கும்பல் மற்றும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் ஈரோடு மாவட்டம், எல்லீசுப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.இந்தச் செய்தியறிந்த மதவெறிக் கும்பலும், பாஜகவினரும் தொல். திருமாவளவன் எம்.பிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறோம் என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த வன் முறைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்து, அப்புறப்படுத்தியுள்ளனர்.இந்தச் சம்பவம் தமிழக அரசியலை வன் முறைக் களமாக்கி, தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபடும் பாஜக, இந்துத்துவ சக்திகளின் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது.அரசியல், தத்துவ நிலைக் கருத்துக் களை வாதப்பிரதிவாதங்கள் மூலம் எதிர் கொள்வது தான் தர்க்கவியல் ஜனநாயகமாகும்.ஆனால் ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாத பாஜகவினர், கும்பல் வன்முறையில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.வன்முறையில் ஈடுபடும் கும்பல்களை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்  என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.