சென்னை, நவ.8- கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகா ரம் கிடைக்கவே கிடைக்காது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழ் வளர்த்த இத்தாலி பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந் துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத் திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதனன்று (நவ.8) மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணி யன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசி யிருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர வாழும் நாடு இந்த நாடு. இதில் பெரியார் கொள்கை கள், இந்து மதத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான், இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது.
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜக வுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழ்நாட்டில், எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும், எத்தனை ஐடி ரெய்டுகள் நடத்தி னாலும், எத்தனை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர்.
தமிழ்நாடு முதல்வரின் அரும்பணிகளும், மக்கள் நலத் திட்டங்களும், ஏற்கெனவே இருக்கும் திமுகவின் வாக்கு வங்கியில் மேலும், 20 விழுக்காடு கூடியிருக்கிறது. எனவே, அண்ணாமலை போன்றவர் களுக்கு அதிகாரத்தில் கையெழுத் திடுகிற வாய்ப்பை தமிழ்நாடு மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார் கள். இன்னும் 25 ஆண்டுகளுக்குப் திமுக ஆட்சிதான்.
இந்தியாவில், இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் 1959-ல் உருவாக்கப்பட்ட பிறகு, செய்யப்பட்ட எண்ணற்ற சாதனை கள் எந்த ஆட்சியில் செய்யப்பட வில்லை. தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த திட் டங்கள் அனைத்தும் நிறைவேற் றப்படுகின்றன. பாஜக மத ரீதியாக வும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண துடிக்கிறது. ஆனால், இந்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சியாக திமுக இருப்பதால், ஆன்மீகவாதிகளை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் இயக்கமாக திமுக இருப்பதால், பாஜகவால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாமல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கை யெழுத்து என்றெல்லாம் அறை கூவல் விடுத்து வருகின்றனர்” என்றார்.