tamilnadu

தண்ணீர் பிரச்சனை காரணமாக பள்ளிகளை மூடினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 22- தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தினமும் 500 லாரிகள் மூலமாக 9 ஆயிரம் நடைகள் குடிநீர் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.  இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், சில பள்ளிகள் தண்ணீர் பிரச்சனை காரணமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகிறது. இது விதிகளுக்கு முரணானது.  பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.