சென்னை, மார்ச் 11- சீனாவில் வெகு வேகமாக பரவிய கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், பீதியும் தமிழக மக்களிடையே நிலவி வரும் சூழலில், சென்னையில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த வைரஸ் குறித்த அச்சத்தையும். பீதியையும் போக்கும் வகையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு மையம், பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை இணைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், துரதிர்ஷ்டவசமாக தொற்று ஏற்பட்டு விட்டால் அதன் அறிகுறிகள் ஆகிய அனைத்துத் தகவல்களும் இந்தக் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களை எவ்வாறு சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வது என்பது குறித்த தகவல்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கைகளை சுத்தமாக்க கழுவுதல், இருமல் மற்றும் தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக் கொள்ளுதல், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படும் நபர்களிடமிருந்து விலகியிருத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களும் இந்தக் கண்காட்சியில் விநியோகிக்கப்படுகின்றன.இந்தக் கண்காட்சியை பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டலத் தலைமை இயக்குநர் கே.வெங்கடேஸ்வர் தொடங்கி வைத்தார்.