ஆவடி, ஜூலை 25- ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதிகளான வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, செந்தில் நகர், சோழம்பேடு, மணிகண்டபுரம், பாலாஜி நகர், கலைஞர் நகர், ஸ்ரீசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் 3 சக்கர வண்டிகளில் தெருக்கள், வீடுகளில் சேரும் குப்பைகளை அகற்றி மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் சமீபகால மாக துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றவில்லை. இதனால் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘முக்கிய சாலை சந்திப்புகளில் மட்டும் குப்பை தொட்டிகள் வைத்துள்ளனர். பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தெருக்கள், தொட்டிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் தெரு, வீடுகளில் உள்ள குப்பைகளை 3 சக்கர வண்டிகள் மூலம் சேகரித்து வந்தனர். இந்த பணியில் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களுடன் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அவர்களது ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது கடந்த 2 மாதங்களாக பேட்டரி ஆட்டோக்கள் மூலம் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது. இதனால் குப்பை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமுல்லைவாயல் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் மற்றும் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுவரு கிறது’’ என்றனர்.