சென்னை, மே 13 -ஆக்கிரமிப்பை தடுத்த செயல் அலுவலர் மீதான தாக்குதலை கண்டித்து அறநிலையத் துறை ஊழியர்கள் திங்களன்று (மே 13) ஆர்ப்பாட்டம் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார் குப்பத்தில் உள்ள முருகன் கோவிலுக்குசொந்தமான இடத்தில் ஒரு சிலர் கட்டிடம் கட்ட முயன்றுள்ளனர். அதனை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவிலில் பணிகளை முடித்துவிட்டு ஞாயிறன்று (மே 12) சீனிவாசன், அவரது உதவியார்தனஞ்செயனும் இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்தனர். மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை, அருமந்தை கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த‘எங்கள் மீதே போலீசில் புகார் கொடுக்கிறியா” என்று கூறியபடி ஒரு கும்பல் வாகனத்தை மறித்து அரிவாளால் வெட்டியுள்ளது.இதில், சீனிவாசன் கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் ஆழமான வெட்டு விழுந்தது. தனஞ்செயனுக்கு காலில் வெட்டு விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததையடுத்து அந்த கும்பல் ஓடி விட்டது. படுகாயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய கூட்டமைப்புத் தலைவர் நெ.இல.சீதரன், “செயல் அலுவலர் மற்றும் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், செயல் அலுவலர்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்தால் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்குஆணையர் பரிந்துரைக்க வேண்டும்”என்று வலியுறுத்தினார். இது தொடர்பான மனுவையும் ஆணையரிடத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்தனர்.இப்போராட்டத்தில், கூட்டமைப்பு நிர்வாகிகள் முத்துசாமி, எம்.ரமேஷ், எஸ்.தனசேகரன், வாசுகி, ராஜாராம், க.அருட் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.