tamilnadu

img

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

தாம்பரம், ஜூலை 16-  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களது 3 வயது மகன் சோம்நாத். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.  இவர்கள் ஒடிசா செல்வதற்காக ஞாயிறன்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அதிகாலை ரயில் என்பதால் இரவே குடும்பத்துடன் வந்து ரயில் நிலையத்தில் தூங்கினர். அதிகாலையில் நீலாவதி எழுந்து பார்த்த போது, அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகன் சோம்நாத் காணவில்லை. பின்னர் ரயில் நிலையம் முழுவதும் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ராம்சிங் சென்ட்ரல் ரயில் நிலைய காவல்துறையிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுவனை வாலிபர் ஒருவர் கடத்திச் செல்வது பதிவாகி இருந்தது.  பின்னர் விசாரணையில், அவர் சிறுவனுடன் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறுவது தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது கடத்தப்பட்ட சிறுவனுடன் மர்ம வாலிபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள கிழக்குப் பகுதி படிக்கட்டில் நடந்து செல்வது தெரிந்தது. கண்காணிப்புக் கேமிராவில் சிக்கிய வீடியோ காட்சியை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை மீட்க ரயில்வே காவல்துறை விரைந்து சென்று சிறுவனை மீட்டனர்.  சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கடத்தல்காரனை காவல்துறையினர் கைது செய்தனர்.