தாம்பரத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை விரைவில் திறக்க ஏற்பாடு
தாம்பரம், ஜூலை 11- தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப் பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவ மனையை இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தாம்பரம் அரசு பொது மருத்துவமனை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினசரி மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையை பல்வேறு வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும், என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டிடம் கட்டுவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. 6 தளங்கள், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை அறைகள், 289 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, என மொத்தம் 400 படுக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தரை தளத்தில் புற நோயாளிகள், முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, 2வது தளத்தில் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, 3வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு, நீரிழிவு நோய் பிரிவு, 4வது தளத்தில் தீக்காயம் பிரிவு, 5வது தளத்தில் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, 6வது தளத்தில் ஆண், பெண்களுக் கான பொது பிரிவு என திட்டமிட்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.