சென்னை:
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநரைக் கண்டித்தும் ஆளுநருக்கு பேனாக்களை அனுப்பி வைத்தும் அக்டோபர் 28 அன்றுமாணவர்கள் ஆவேச போராட்டத்தை நடத்தினர்.மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழகஅரசு அனுப்பியது. சுமார் 50 நாட்களாகியும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கையை அரசு நடத்த முடியாமல் உள்ளது. ஆளுநரிடம் ஒப்புதல் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. இதனைக் கண்டித்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டு பல்வேறு இயக்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக்டோபர் 28 புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதுஆளுநர் உருவப்படம் அருகே பேனாக்களை குவித்த மாணவர்கள் “கை யெழுத்திட பேனா இல்லையென்றால் மாணவர்கள் நாங்கள் தருகிறோம்” என்று முழக்கமிட்டனர்.இதன்பின்னர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும் இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு அழித்துள்ளது.
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம்இயற்றியது. அதற்கும் அனுமதியளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமற்றது; தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் செயல். ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் தர காலதாமதம் செய்வதால், தமிழக அரசு அரசாணை வெளியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதனை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆளுநர் 7.5 உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தர மறுத்தால் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த போராட்டத்திற்கு சங்கத்தின்மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் ஜான்சி ,மாவட்ட நிர்வாகிகள் தீ.சந்துரு, எஸ்.சுபாஷ் (தென்சென்னை), விக்னேஷ் (மத்தியசென்னை), இசக்கி,ரஜேந்திர பிரசாத் (வட சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.