tamilnadu

img

‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம்

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச சக்தியான  பாஜக-வைத் தோற்கடிப்போம் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்ற முழக்கத்தோடு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஞாயிறன்று  திருச்சிராப்பள்ளியில் மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார்.  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவன் முன்னிலை வகித்தார்.  

மாநாட்டில் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், “ இராமர்கோவில் திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சிக்கும்  அழைப்பு விடுத்தபோது இது கோவில் திறப்பு விழா அல்ல. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கோவில் அதனால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவின் அழைப்பை நிராகரிக்கிறது, எனக் கம்பீரமாக அறிவித்துள்ளது.  பாஜக இராமரை வைத்து அரசியல்  நடத்துகிறது. நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கும், இராமர்கோவில் திறப்பு விழாவிற்கும் நமது குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை. நாடாளுமன்றத்தில் இருந்து அனைத்து எம்.பி.க்களையும் வெளியே அனுப்பி விட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இருக்கிற குறைந்தபட்ச ஜனநாயகத்தை  பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய அவசியம் நமக்கு உள்ளது.  ஜனநாயகத்தை பாதுகாத்தால்தான் நாம் விரும்பும் மாற்றங்களை நோக்கிச் செல்ல முடியும். அதற்காக மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, காந்தியம் உட்பட அனைத்து அரசியல் இயக்கங்களும் கைக்கோர்த்து நிற்க வேண்டிய நேரம் இது என்றார்.  

நிகழ்வில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கோபட்காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, திமுக தலைமை கழகச் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, சிபிஐஎம்எல்(விடுதலை) மாநிலப் பொதுச்செயலாளர் ஆசைத்தம்பி, சிபிஐ துணைப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி வேலுச்சாமி, திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சே.வாஞ்சிநாதன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொதுச்செயலாளர் லோகநாதன், மக்கள் அதிகாரம் பொதுச்செயலாளர் சி.ராஜூஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் செழியன் நன்றி கூறினார்.